பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடன் பதவி நீக்கம் செய்யுமாறு பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட “ஏ.என்.ஜே. தி. அல்விஸ் ” ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை, கம்மன்பில இன்று வெளியிட்டார். இது தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், 2 ஆவது அறிக்கையை அறிக்கையை அடுத்த வாரம் திங்கட்கிழமை வெளியிடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
” ஏ.என்.ஜே. தி அல்விஸ் அறிக்கையில், தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொலிஸ் அதிகாரிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது.” – எனவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
