அக்கரபத்தனை அல்பியன் தோட்ட மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய ஆலயம் ஆத்தடி மாரியம்மா.
தோட்டத்தின் பிரதான ஆலயமான முத்த்மாரியமாமன் ஆலய உற்சவத்தின் போது கரகம் மற்றும் காவடி பாலிக்கும் இடமாகவும் ஆலயம் மற்றும் இல்லங்களில் ஏற்படும் சுபகாரியங்களுக்கு தீர்த்தம் எடுத்துவரும் புனிதமான இடமாகும்.
ஹட்டன் நகரிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் போது அல்பியன் தோட்ட எல்லையில் இடதுபக்கமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது.
ஹட்டன் போடைஸ் அக்கரபத்தனை அல்பியன் பிரதேசங்களை இணைக்கும் மலை உச்சியில் இருக்கும் வனாந்தர பகுதியில் இருந்து ஊற்றெடுத்து ஓடி வரும் நீரோடையும் உயர்ந்த கறுப்பன் தேயிலை மரங்களும் செண்பக மரமும் ஆலயத்தை அழகுபடுத்துகிறது.ஆலயத்தின் தலவிருட்சமாக செண்பக மரம் காணப்படுகிறது.
செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்றும் உயிர்களைப் படைக்கும் கடவுள் பிரம்மா கூறியிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
திருத்தென்குடித்திட்டை, திருஇன்னம்பர், திருச்சிவபுரம், திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம் முதலிய சிவத்திருக்கோயில்களிலும் திருச்சேறை, திருநந்திபுர விண்ணகரம் ஆகிய திருமால் கோயில்களிலும் தலவிருட்சமாகச் செண்பக மரம் விளங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.
நடுகல்லிலான பதிவும் பீடம் மட்டுமே ஆரம்பத்தில் இருந்தது.2005ஆம் ஆண்டு புனருத்தானம் செய்து ஆலயத்தை கட்டி எழுப்பி தற்போது அழகாக காட்சியளிக்கிறது.
இந்த ஆலயத்தில் தற்போது பூசை வழிபாடுகளை தோட்ட பொதுமக்களின் உதவியுடன் 65 வயதான மாரிமுத்து இராஜகோபால் என்ற பூசாரி செய்து வருகிறார். இவருக்கு முன் இவருடைய பரம்பரையினரே வழிபாடுகளை செய்து வந்துள்ளனர்.
அல்பியன் தோட்ட மக்களின் பல்வேறு வேண்டுதல்களையும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வரும் ஆத்தடி மாரியம்மனுக்கு ஒவ்வொரு நாளும் விளக்கிட்டு எந்த நேரமும் பக்தி பரவசத்துடனேயே ஆலயம் காட்சியளிக்கிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூசை நடைபெறும்.வருடத்தில் ஆடிமாதம் விசேட பூசை இடம்பெற்று அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.இந்தப் பாதையில் ஓடும் அனைத்து வாகன சாரதிகளும் ஆத்தடி மாரியம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்த ஆலயத்தில் பூசை வழிபாடுகள் பாரம்பரிய முறையிலேயே இடம்பெறுகிறது.
பூசையின் போது தப்பு,மேளம், உடுக்கு போன்றவை இசைக்கப்படுகிறது.மாமிசம் மதுபானம் எந்தகாலத்திலூம் புழங்குவதில்லை அல்பியன் தோட்ட மக்களின் வழிபாட்டு தளங்களில் மிக முக்கியமான இடமாக ஆத்தடி மாரியம்மா விளங்குவது குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்ட மக்க்ள செறிந்து வாழும் இடங்களிலும் அவர்களின் பணித்தளங்களிலும் கருமாரியம்மன் காட்டுமாரியம்மன்,காட்டேரியம்மன ,வீட்டுமாரியம்மன்,அங்காயம்மன், ஆத்தடிமாரியம்மன் போன்ற பல பெயர்களை கொண்ட மாரியம்மன் வழிபாடுகள் உண்டு.அல்பியன் தோட்டத்தில் உள்ள ஆத்தடி மாரியம்மன் அங்கே இயற்கையாக பாய்ந்தோடும் குடிநீரை பாதுகாக்க அந்த தோட்டத்தில் உள்ள முன்னோர்களால் வழிபடப்பட்டி க்கலாம்.
எழுத்து – (அ.ரெ.அருட்செல்வம்)