நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை பயன்படுத்தியேனும் மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
பேரனர்த்ததில் கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்கள் பாரிய சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு அதிகளவில் மலையக மக்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள் பேரவலத்தை சந்தித்தார்கள்.
மரணங்கள், வீடு இழப்புகளும் இங்கேயே அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த மக்கள் தொடர்பில் விசேட அவதானம் அரசாங்கத்தால் செலுத்தப்பட வேண்டும்.
இந்த மக்களின் காணி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இவர்களுக்கு பாதுகாப்பான காணிகளில் வீடுகள் அமைக்கப்பட வேண்டும். மலை உச்சிகளில் இருந்து இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அந்த மக்கள் நகரங்களையும், கிராமங்களையும் நோக்கி வர வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. அதற்காக அரச அதிகாரிகள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை மீண்டும் தோட்ட வேலைகளுக்கு வருமாறு அழைக்கின்றனர்.
எங்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வாழ்க்கை தேவை, உயிர்கள் தேவை. ஆனால் தோட்ட நிறுவாகம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மூலம் அந்த மக்களுக்கு போலியான நம்பிக்கையை உருவாக்கி வீடுகளுக்கு திரும்புமாறு கூறுகின்றது. இதில் அரசாங்கத்தின் தலையீடுகள் அவசியமாகும்.
இந்த பேரவலத்தின் மூலமாவது நீண்ட காலமாக கோரிவரும் மலையக காணி உரிமை விடயத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கின்றோம். பாதுகாப்பான காணியே அவசியம். அவ்வாறான நிலம் இருந்தாலே அவர்களால் வாழ முடியும். இன்று அவசர கால சட்டம் அமுலில் உள்ளது. அரசாங்கம் தேவையென்றால் காணிகளை சுவீகரிக்க முடியும். அரசாங்கத்திற்கு தேவையான அதிகாரங்கள் உள்ளன. அதன்படி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
