அஸ்வெசும குறித்து இன்று விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சுமார் 454,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து மாவட்ட மட்டத்தில் அதிகளவான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கணக்கெடுப்புக்கான ஒவ்வொரு விண்ணப்பத்தின் தகவல் சேகரிப்பும் IWMS மென்பொருளின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அலுவலர்கள் அந்தந்த வீடுகளுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களின் தகவல்களைக் கண்காணித்து, தொலைபேசி செயலி மூலம் சமூகப் பாதுகாப்புத் தகவல் பதிவேட்டில் பதிவுசெய்வர் எனவும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கணக்கெடுப்பு நடவடிக்கையை கண்காணித்து மதிப்பீடு செய்வதற்கு கண்காணிப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விஜேரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கணக்கெடுப்பு அலுவலரால் தகவல் கட்டமைக்கப்பட்ட பின்னர், அனைத்து பிரதேச செயலாளர்களும் கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியில் விண்ணப்பதாரர்களின் முழுமையான விவரங்களை கண்காணிக்க முடியும்.
கணக்கெடுப்பின் முடிவில், அந்தந்த குடும்பங்களின் தகவல்கள் தேர்வுக் குழுக்களால் கண்காணிக்கப்படுகின்றன.

தேர்வுக் குழுக்கள் கணக்கெடுத்த, குடும்பத்தின் தகவலைக் கண்காணித்து, தெரிவு அளவுகோல்களின் கணக்கீட்டை அங்கீகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு, தெரிவு அளவுகோல்கள் கணக்கிடப்பட்ட பின்னர், வறுமையைக் கணக்கிடுவதற்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. மேலும் இது கல்வி, சுகாதாரம், பொருளாதார நிலை, சொத்துகள், வீட்டு நிலைமை மற்றும் குடும்ப புள்ளிவிவரங்கள் ஆகிய 06 பரிமாணங்களில் விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது. பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் வறியவர்கள் ஆகிய 04 சமூகப் பிரிவுகளின் கீழ் ‘அஸ்வெசும’ நலன்புரி நலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழமைபோல் வழங்கும் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த வேலைத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு சுமார் 34 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 1,854,000 பேர் பயன்பெற தகுதி பெற்றுள்ளனர். அதற்காக அரசாங்கம் வழங்கிய தொகை 58.5 பில்லியன் ரூபா.
மேலும், ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் களத் தகவல் சேகரிப்பை திறம்படச் செய்ய புகைப்படங்கள், புவி வரைபடங்கள், குரல் பதிவு போன்ற வசதிகளுடன் கூடிய புதிய தொலைபேசி செயலி (Mobile App) நலன்புரி நன்மைகள் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.’’ என்றார்.

இந்த நலன்களுக்கு விண்ணப்பிக்கும் போது எப்போதும் மிகச்சரியான தகவல்களை வழங்குமாறும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன கேட்டுக்கொண்டார்.
நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர்களான கமல் பத்மசிறி, குமா துனுசிங்க மற்றும் பலர் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles