பாடசாலைகளில் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேற்று (03) மத்திய மாகாண சயையின் முன் வளாக வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மாகாண பாடசாலைகளின் கீழ் ஆசிரியர்களாக சேவையில் இணைக்கப்பட்டிருக்கும் பட்டதாரிகளை மீண்டும் அரச அலுவலகங்களுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காலை 10 மணிக்கு ஆர்மபமான இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கிலான பட்டதாரிகள் பங்கெடுத்திருந்தனர்.
இதன்போது மாகாண சபை அதிகாரிகள் பட்டதாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதும் அந்த அழைப்பை புறக்கணித்த பட்டதாரிகள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் அகில இலங்கை பாடசாலை பட்டதாரிகள் சங்கத்தினரால் நடத்தப்பட்டது.
மதியம் 2.00 மணிக்கு மேலாகவும் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கபட்டது.
அதன் பின்னர் மத்திய மாகாண கல்விச் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தபட்டிருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச அலுவலகங்களுக்கு அனுப்பபட மாட்டார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.