” ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதுடன், இது ஒரு சர்வதேச வியாபாரமாக மாறிவருகின்றது.” – என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இந்நிலைமை ஒரு சிக்கலான சவாலை ஏற்படுத்துவதுடன், இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்லாமல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு கொழும்பல் இன்று நடைபெற்றது.
இங்கு பிரதான உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆட்கடத்தலுக்கு எதிராக சிவில் சமூக அமைப்புகளை மேம்படுத்துதல்” எனும் திட்டத்தின் கீழ், யுஎஸ்எய்ட்டின் (USAID) நிதியுதவியுடன் சேப் (Safe) அமைப்புடன் இணைந்து, தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி (NAHTTF) இந்த மூன்று நாள் செயலமர்வினை ஏற்பாடு செய்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதில் 36 பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆட்கடத்தல் தொடர்பான அச்சுறுத்தலின் தீவிரத்தை உணர்ந்து, ஆட்கடத்தலைக் கண்காணித்து எதிர்த்துப் போராடுவதற்காக 2021-2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் அத்துடன், எங்கள் அணுகுமுறையானது தடுப்பு, பாதுகாப்பு, வழக்கு விசாரணை மற்றும் கூட்டாண்மை என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது என மேலும் குறிப்பிட்டார்.
கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பாதுகாப்புச் செயலாளர், ஆட்கடத்தல்களை முழுமையாக தடுப்பதற்கு அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.
தற்போது, இந்த குற்றத்திற்கு எதிரான எங்கள் முயற்ச்சியில் ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவுடன் 20 பங்குதாரர்கள் சேர்ந்து செயற்படுகிறார்கள் என மேலும் சுட்டிக்காட்டினார்.
பிரதேச செயலாளர்களின் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாதுகாப்பு செயலாளர், இந்த பல்துறை ஒத்துழைப்பு தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் முயற்சிகளுக்கு தீவிரமாக பங்களிக்க உதவும் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டு முயற்சியின் ஆக்கபூர்வமான முடிவுகளை வெளிப்படுத்திய பாதுகாப்பு செயலாளர், “அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட நபர்களின் கடத்தல் தொடர்பான ஆண்டறிக்கையில், அடுக்கு 2 கண்காணிப்பு பட்டியலில் இருந்து அடுக்கு 2க்கு நாம் மேம்படுத்தப்பட்டதன் மூலம் எங்கள் முன்னேற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அரச நிறுவனங்களுடன் இணைந்து, கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணிக்குழுவுடன் இணைப்பதற்கும், ஆட்கடத்தல் குறித்த விழிப்புணர்வை கல்வி துறையில் சேர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறினார்.
ஆட்கடத்தல் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று குறிப்பிட்ட அவர், இலங்கையின் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி என்ற வகையில் ஆட்கடத்தலுக்கு எதிராக முழு பலத்துடன் போராடுவதில் உறுதியாக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.










