இணக்கம் காட்ட சீனா தயக்கம்! இலங்கையை பொறியில் வைத்திருக்கும் முயற்சியா?

இலங்கையுடனான சீன உறவு என்பது ஒருபோதும் நட்பு ரீதியானதாக இருக்காது. அது வர்த்தக ரீதியாகவே இருக்கும் என்பதை இதற்கு முன்னர் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. உலகில் சீனா ஏனைய நாடுகளுடன் உறவு வைத்துக் கொள்ளும் போதும், அதில் என்ன இலாபம் இருக்கிறது என்பதையே பிரதானமாக பார்க்கிறது.

குறிப்பாக கிழக்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் என்பதும் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. இதனைத்தவிர ஆபிரிக்க நாடுகளிலும் சீனா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இவை அனைத்தையும் சீனா பொருளாதார அல்லது வர்த்தக ரீதியாகவே செய்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையிலும், சீனாவின் நோக்கம் என்பது வர்த்தக அல்லது பொருளாதார ரீதியாகவே இருக்கிறது. பூகோள அரசியலில் இலங்கையின் அமைவிடம் என்பது மிக முக்கிய இடத்தை வகிப்பதால் சீனா இதில் ஆர்வம் காட்டுகிறது. கப்பல் போக்குவரத்தில் அதீத கவனம் செலுத்தியுள்ள சீனா, இலங்கையை ஒரு பிரதான மையமாகக் கொண்டுள்ளது. அதற்காக இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் அல்லது பொறிக்குள் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறது.

நெருக்கடியில் இருந்து மீள முயலும் இலங்கைக்கு உதவி கிடைக்குமா?

இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. உலக அரங்கில் திவாலான நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அடுத்த மாதம் முதல்கட்ட உதவிகளை வழங்கத் தயார் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. தற்போது கடன் செலுத்த வேண்டியுள்ள நாடுகள், தரப்புக்கள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடன் தவனைகளை மீள்கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நிபந்தனைககளில் பிரதான ஒன்றாகும்.

இதற்கான முயற்சிகளில் இலங்கை மும்முரமாக இறங்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் பல முக்கியச் சந்திப்புக்களை இலங்கை அரச உயர் தரப்பு நடத்தி வருகிறது. மூடிய அறைக்குள் இந்தச் சந்திப்புக்கள் நடக்கின்றன. பரிஸ் கிளம், கடன் வழங்கியுள்ள ஏனைய நாடுகள், தரப்பினர் என அனைத்துத் தரப்பையும் தனித்தனியாக சந்தித்து வருகிறது. கடனை செலுத்துவதற்கான மீள் கட்டமைப்பு முறைகளை பேசி வருகிறது. நவம்பர் மாத இறுதியாகும் போது இதில் சுமார் 85 வீதமான சாதக பதிலை இலங்கைப் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. ஆனால் சீனா மட்டும் இந்த விடயத்தில் அடம்பிடிப்பதாக தெரிகிறது.

கடன் மறுசீரமைப்பு செய்துகொள்வதற்கு சீனா மறுக்கிறது. கடந்த வாரம் சீனத் தூதுவருடன் மூடிய அறையில் இலங்கை ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. அதில், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவத் தயார் என்று சீன தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஆனால், கடன் மறுசீரமைப்பிற்கு சீனா தயக்கம் காட்டுகிறது. சீனாவின் கடனை திரும்பிச் செலுத்த புதிதாக கடன் வழங்க சீனா தயாராக இருக்கிறது. ஆனால் கடனை மறுசீரமைப்பு செய்துகொள்ள தயாராக இல்லை என்று சீனா கூறியுள்ளது. ஆனால், இலங்கையின் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காண ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்று சீனத் தூதரகம் அறிவித்திருந்தது. எனினும், எவ்வளவு தூரம் சீனா இந்த விடயத்தில் இலங்கைக்கு உதவும் என்பது சந்தேகமே. கடன் மறுசீரமைப்பு சீனா தொடர்ந்து தயக்கம் காட்டியது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன்

இலங்கையுடன் சீனா கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ளும் பட்சத்தில், கடன் வழங்கியுள்ள ஏனைய நாடுகளுடனும் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டிவரும் என்று சீனா ஆரம்பம் முதலே மறுசீரமைப்பிற்கு மறுத்து வருகிறது. இதனால்தான் கடனை மீளச் செலுத்த புதிய கடனை வழங்கத் தயார் என்று கூறியிருந்தது. சீனாவிடம் புதிதாக கடன் வாங்கும்பட்சத்தில், கடனையும், வட்டியையும் செலுத்த வட்டிக்கு மீண்டும் கடன் வாங்கும் நிலைமை இலங்கைக்கு ஏற்படும். இது நீண்டகால பொருளாதார மீட்சிக்குத் தடையாக இருக்கும். இதனாலேயே சர்வதேச நாணய நிதியம், கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கையை ஊக்கப்படுத்தி வருகிறது.

மேகத்தேய நாடுகளுடன் இந்தியாவும் கடன் மறுசீரமைப்பிற்கு இணங்கியுள்ள நிலையில், தான் ஏன் இதற்கு இணங்க வேண்டும் என்ற இருக்கமான நடைமுறையை சீனா பின்பற்றுகிறது.  இதனாலேயே கடன் மறுசீரமைப்பு செய்துகொள்வதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்க சீனா தயக்கம் காட்டுகிறது.

ஆனால், கடன் மறுசீரமைப்பு செய்துகொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும் பட்சத்தில், சர்வதேசத்தின் நம்பிக்கையை இலங்கை மீண்டுமு; பெற்றுக் கொள்ளும். அதன்பின்னர் சர்வதேச நாடுகளிடமும், சர்வதேச நிறுவனங்களிடமும் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு வழி ஏற்படும். இந்த வழியை திறந்துவிடாமல் சீனா தடை ஏற்படுத்துகிறதா என்ற சந்தேகமும் தற்போது வலுத்துள்ளது. இவ்வாறு இந்த நெருக்கடியில் இருந்து மீளும் பட்சடத்தில் தனது கட்டுப்பாடுகள் தளர்ந்துவிடக் கூடும் என்று சீனா கணக்குப்போடக்கூடும். அத்துடன், சீனாவை தனது பொறிக்குள் வைத்துக்கொள்வதற்கு சீனாவிற்கு இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்பதையும் சீனா ஊகித்துவைத்திருக்கக்கூடும். இதற்காகவே தொடர் பேச்சுக்கள் நடந்தாலும் சீனா இன்னும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பணிகளுக்கு இவ்வளவு தயக்கம் காட்டி வருகிறது.

Related Articles

Latest Articles