” மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்கவே முடியாது. அவ்வாறு செய்யக்கூடிய நபர்களும் எதிரணியில் இல்லை.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மே – 09 சம்பவத்தின்போது செவனகல பகுதியில் வீடொன்று தீப்பிடித்துள்ளது. இந்த வீட்டுக்குரிய இழப்பீட்டை வீட்டு உரிமையாளர் பெறவில்லை. ஆனால் ராஜபக்சதான் இழப்பீட்டை பெற்றுள்ளார். வீட்டு உரித்து பத்திரம் வேறொருவர் பெயரில் உள்ளது. அந்த பட்டியலும் விரைவில் வெளியிடப்படும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நாட்டு மக்களே கட்டியெழுப்பினார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். இப்படிபட்ட அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. நாட்டை மீட்டெடுத்த பின்னரே நாம் திரும்பி பார்ப்போம்.” – என்றார்.
