இந்தியாவுக்கு எதிரான இன்றைய ரி-20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-கே.எல்.ராகுல் களமிறங்கினர். ஆனால் இந்திய அணிக்கு இன்று தொடக்கம் சரியாக அமையவில்லை. இங்கிலந்து பவுலர் மார்க் வுட் வீசிய 3வது ஓவரில், கே.எல்.ராகுல்(0) பவுல்ட் ஆனார். மீண்டும் மார்க் வுட் பந்துவீச்சில் 5வது ஓவரில், ரோகித் சர்மா(15 ரன்கள்) கேட்ச் ஆனார்.
அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 4 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து கேப்டன் விராட் கோலியுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் சிறிது ரன் ரேட் உயர்ந்தது. இந்த நிலையில், சாம் கர்ரன் வீசிய 12வது ஓவரில், 3வது ரன்னுக்காக ஓடிய போது ரிஷப் பண்ட்(25 ரன்கள்) ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 9 ரன்களில், மார்க் வுட் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 20வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா(17 ரன்கள்) கேட்ச் ஆனார். இறுதி வரை நிலைத்து நின்று அதிரடி காட்டிய விராட் கோலி, 46 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி 77 ரன்கள் அடித்தார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 77 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 4வது ஓவரில் சாஹல் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர், நிதானமாக ஆடி, சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டார். அடுத்து வந்த டேவிட் மலான் 18 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜானி பேர்ஸ்டோவ் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி இறுதி வரை நிலைத்து நின்று ஆடி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தது. இங்கிலாந்து அணி 18.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற்றது. இறுதி வரை ஜானி பேர்ஸ்டோ(40 ரன்கள்), ஜாஸ் பட்லர்(83 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.