உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் புனிதத்தலமான கேதார்நாத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் இன்று குப்தகாஷிக்கு அதிகாலை 5.30 மணிக்கு கிளம்பியது. இந்த ஹெலிகாப்டர் அதிகாலை 6.00 மணியளவில் ருத்ரபிரயாகையை கடக்க முயன்றபோது பெரும் விபத்துக்குள்ளானது. ருத்ரபிரயாகின் கவுரிகுண்ட் வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஹெலிகாப்டர் விமானி, பயணிகள் என 7 பேர் பலியாகினர்.
இந்தத் தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆரியன் எனும் தனியார் நிறுவனத்திற்கு இந்த ஹெலிகாப்டர் சொந்தமானது. இந்த விபத்து, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்று அதே ஹெலிகாப்டர் குப்தகாஷியில் இந்து யாத்ரீகர்களுடன் கேதார்நாத்துக்கு பறந்துள்ளது. அனைவரையும் பத்திரமாக இறக்கிய பின் வேறு யாத்ரீகர்களுடன் குப்தகாஷிக்கு திரும்பியபோது இந்த சோக விபத்து நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, இம்மாதம் ஏழாம் தேதி ருத்ரபிரயாக்கில் ஒரு ஹெலிகாப்டரின் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேதார்நாத்துக்கு கிளம்பிச் சென்ற இந்த ஹெலிகாப்டர் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் இருந்த அனைத்து யாத்ரீகர்களும் விமானிகளும் பாதுகாப்பாக இருந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவசரமாக சிர்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் தரையிறக்க வேண்டியிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 6 பேர் இருந்தனர், அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பி இருந்தனர். லேசான காயமடைந்த விமானி மருத்துவமனை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது