இந்தியா, இங்கிலாந்துக்கிடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, லண்டனில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். அப்போது, அவர்களது முன்னிலையில் இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

‘இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடையும். இந்திய இளைஞர்கள், விவசாயிகள் பயனடைவார்கள். இரு நாடுகளிலும் எளிதாக வணிகம் தொடங்கு வதற்கு ஏற்ற சூழல் உருவாகும்.” என்று பிரதமர் மோடி இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் ஸ்மார்மருக்கு நன்றி. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஒருபோதும் இரட்டை நிலைப்பாடு இருக்க கூடாது. ரஷ்யா – உக்ரைன் போருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். மத்திய கிழக்கில் நிலவும் குழப்பங்களுக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும்.

அரசுமுறை பயணமாக இந்தியா வருமாறு இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருக்கு அழைப்பு விடுக்கிறேன்.” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இங்கிலாந்துடன் கடந்த 2022 முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. கடந்த பெப்ரவரி மாதம் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் லண்டன் சென்ற போது ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மோடியின் பயணத்தின் போது கையெழுத்தாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்தால் இந்திய நகைகள், வைரங்கள், மருந்துகள், தேநீர், அரிசி, ரசாயன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இங்கிலாந்து அரசு கணிசமாக குறைக்கும்.

இங்கிலாந்தின் சொகுசு கார்கள், மதுபானங்கள், மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், விமான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை இந்திய அரசு கணிசமாக குறைக்கும். இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் சொகுசு கார்களின் விலை இந்தியாவில் 30மூ வரை குறையும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Articles

Latest Articles