‘இந்துக்களின் பண்டிகைகள் குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கு பாடம் எடுங்கள்’

“இந்து கலாச்சார திணைக்களத்தில் இந்து பண்டிகைகள் பற்றிய நாட்காட்டியை பெற்றுக்கொண்டு, செயற்படும்படி, வடக்கு, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும், யாழ், வன்னி பிராந்திய இராணுவ கட்டளை தளபதிகளுக்கும் கூறுங்கள்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., அமைச்சர்களான சரத் வீரசேகர, சமல் ராஜபக்ச ஆகியோரிடம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் கூறியதாவது,

” கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளையும், நவம்பர் 29 பெளர்ணமியன்று நடந்த “கார்திகை தீப” இந்து பண்டிகையையும், பொலிஸும், இராணுவமும் போட்டு குழப்பியடித்துள்ளன.

இராணுவத்தினரும், பொலிஸாரும், கார்த்திகை தீப விளக்கேற்றல்களை தடை செய்துள்ளார்கள். இத்தகைய நடைமுறைகள் மூலம் இந்நாட்டில் பெளத்தர்கள், இந்துகள் மத்தியில் ஒருபோதும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது.

இங்கே சபையில் வந்து, கார்த்திகை தீப நிகழ்வுகளை பாதுகாப்பு பிரிவினர் குழப்பும் சம்பவங்கள் நடைபெறவில்லை என சொல்ல வேண்டாம். இவை நடந்துள்ளன. இதற்கு எதிராக பொலிஸ் புகார்கூட செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி இங்கு வன்னி எம்பி சார்ல்ஸ் நிர்மலநாதன் சொல்வது முற்றிலும் உண்மை.

கடைசியாக எமது ஆட்சியில் எனது பொறுப்பிலேயே இந்து சமய துறை இருந்தது. ஆகவே மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள். அவை பற்றி இந்த சபையில் பேச வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது.” – என்றார்.

Related Articles

Latest Articles