இன்று (14) முதல் நாளாந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என மின்சக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதால், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (09), இலங்கை முழுவதும் காலை 11.15 மணி முதல் மின் தடை ஏற்பட்டது. பாணந்துறை கிரிட் உப மின்நிலையத்தில் குரங்கு ஒன்று நுழைந்ததாகக் கூறப்படுவதோடு, இதனால் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.
இதன் காரணமாக பாதுகாப்பு செயன்முறைக்கு அமைய தன்னியக்கமாக இயக்கத்தை நிறுத்திய நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் தற்போது செயற்பாட்டு நிலையை எட்டியுள்ள நிலையில் மின் வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகளிலுமிருந்து 900 MW (300×3) தேசிய கட்டமைப்புக்கு வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நிலக்கரி மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்று செயற்பாட்டு வந்தமைக்கு அமைய, அலிருந்து தற்போது 300 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் வெற்றிகரமாக மீண்டும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மின்சார சபை (CEB) கடந்த திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்க்கிழமை (11) ஆகிய நாட்களில் நாடு முழுவதும் 4 பிரிவுகளின் கீழ் வெவ்வேறு மண்டலங்களில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்தியிருந்ததோடு, குறைந்த மின் தேவை காரணமாக நோன்மதி தினத்தன்று (12) மின் தடை அமுல்படுத்தப்படவில்லை.
இருப்பினும், நேற்று (13) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் எதிர்கால மின்வெட்டு குறித்த முடிவை இன்று (14) காலை அறிவிப்பதாக, மின்சார சபை தெரிவித்திருந்த நிலையில், தற்போது மின் வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
