20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (29) கையொப்பமிட்டார்.
இன்று (29) முற்பகல் 11.30 மணிக்கு சபாநாயகர் தனது கையொப்பத்தையிட்டு இதனை சான்றுரைப் படுத்தியதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதமானியுமான நீல் இத்தவலவும் கலந்துகொண்டிருந்தார்.
இதன் அடிப்படையில் அரசியலமைப்புக்கான 20வது திருத்தம் இன்று முதல் முழுமையாக அமுல்படுத்தப்படும்.
அரசியலமைப்பின் 20வது திருத்தம் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கான இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்தான குழுநிலையின் மூன்றாவது வாசிப்பின் போது ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் திருத்தங்கள் விவாதிக்கப்பட்டதுடன், மூன்றாவது வாசிப்பின் போதான வாக்கெடுப்பில் திருத்தத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், ஒருவர் வாக்களிப்பின் போது சமூகமளித்திருக்கவில்லை.
