இரண்டாக உடைகிறது மொட்டு: 12 மாவட்ட தலைவர்கள் ரணில் பக்கம்!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக வேறு வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கினால் கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்படுவதற்கு மொட்டு கட்சியின் 12 மாவட்ட தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தெரியவருகின்றது.

இராஜாங்க அமைச்சரொருவரின் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இரகசிய கலந்துரையாடலொன்றின்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

இக்கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மொட்டுக் கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பெரும்பான்மையினரின் கருத்துக்கு எதிராக சென்று கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மேற்படி 12 தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.

அதற்காக அவர்கள் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 75 மொட்டுக் கட்சி எம்.பிக்களின் ஆதரவை பெற்றுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் உள்ளாட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles