பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதற்காக மரக்கறி, பழவகை போன்று விவசாய உற்பத்திகள் உள்ளிட்ட, 433 பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தாா்.

டயில், கிரனைட், தளபாடங்கள், பிளாஸ்டிக், முகக்கவசம், துவிச்சக்கரவண்டி, சவர்க்காரம், உப்பு ஆகிய பொருட்களை இறக்குமதி செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட பிரதமரிடம் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, பிரதமரின் சார்பில் பதலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.
இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 2018ஆம் ஆண்டு 2.2 பில்லியன் அமெரிக்க டொலரும், 2019ஆம் ஆண்டு 1.2 பில்லியன் அமெரிக்க டொலரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிககமாக இடைநிறுத்தியதால் 1.6 பில்லியன் டொலரை மீதப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
அதேபோன்று வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையின் காரணமாகச் சந்தையில் எழுந்த கேள்வியை முழுமையாக்குவதற்கு வாகன ஒழுங்குப்படுத்தல் தொழிற்துறையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பொருட்களைத் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்வதற்காக அமைச்சினால் வெற்றிகரமான பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டாா்.










