ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவரடங்கிய தூதுக் குழுவொன்று இன்று இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தருகிறது.
இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா? இல்லையா? என்று மேற்படி ஐவர் கொண்ட குழு அறிக்கையொன்றை தயாரித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபகச் , வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட அரசாங்கப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர், எதிரணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் 2017ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்படுமென்று வாக்குறுதி அளித்திருந்தது. அதன் பின்னர் கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமென்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டு தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமாக அமைத்துள்ள குழுக்களின் செயற்பாடுகளையும் அவற்றின் அறிக்கைளையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடத்தில் வெளிப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.