இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாக கோருகிறது சீன உர நிறுவனம்!

விஞ்ஞான ரீதியான பரிசோதனை முடிவுகளை மீறி, சோதனை முடிவுகளைத் தவறாகக் குறிப்பிட்டமை மற்றும் பொய்யான சோதனை முடிவைக்கொண்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்தமை என்பவற்றுக்காக, விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனம் சட்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்தக் கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையின் அலட்சியத்தினாலும் மற்றும் தவறான அறிக்கைகள் காரணமாகவும் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட, ஹிப்போ ஸ்பிரிட் (Hippo sprit) கப்பலில் உள்ள சேதன உரத்தில் அர்வீனியா எனப்படும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை என்றும், அதில் அதிக பாதுகாப்பான மற்றும் அதிக திறன் கொண்ட சேதன உரமே இருப்பதாகவும் சீன கிண்டாவோ சீவிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி கடிதம் கிடைத்த மூன்று நாட்களுக்குள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த சட்டக் கடிதம் குறித்து தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையின் மேலதிக பணிப்பாளர் வைத்தியர் துஷார விக்கிரமாராச்சியிடம் வினவியபோது, ​​இதுவரை தமக்கு அக்கடிதம் உத்தியோகபூர்வமாகக் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles