இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவரை, இராஜாங்க அமைச்சர் வரவேற்றார். அதன்பின்னர் இரு தரப்பு பேச்சு இடம்பெற்றது
1948ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்ட கால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர், சிறந்த இருதரப்பு உறவுகள் சுமார் 75 வருடங்களாக இருந்து வருவதாகவும், இது மேலும் பல வருடங்கள் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையானது உலகில் எழுத்தறிவு வீதம் அதிகம் உள்ள நாடாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் கடல்சார் பயிற்சிக் கல்லூரி ஒன்றினை இலங்கையில் நிறுவுவது குறித்து ஆய்வு செய்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பின் போது பிரான்ஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஆரேலியன் மெயில்லெட் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு பொறுப்பான இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு அதிகாரி கொமாண்டர் ஜீன்-பாப்டிஸ்ட் ட்ரூச் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.










