இலங்கையில் பிடிக்கப்படாத அல்லது மிக அரிதான மீன் இனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சீனாவிடம் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பாக வெளியான தகவலில் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் – .
குறித்த தகவலில் உண்மைநிலை இருப்பது போல் தெரியவில்லை. எனது இராஜாங்க அமைச்சுக்கு தான் இலங்கை கடற்தொழில் கூட்டுதாபனத்தை கண்காணிக்கின்ற, அல்லது செயற்படுத்துகின்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த விடயத்தை நேர்மையாக, நியாயமாக, சட்ட பூர்வமாக செய்ததாக கூறுகிறார்.
அத்துடன் கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கையில் மிக குறுகிய காலத்தில் பிடிக்கப்படுகின்ற அல்லது பிடிபடாத மீன்களை தான் இறக்குமதி செய்யலாம் என இலங்கை கடற்தொழில் கூட்டுஸ்தாபனத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்தேன்.
அதேபோன்று நியாயமான விலையில், தரமானதாக, திணைக்களத்தின் சட்ட திட்டங்கள் உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் இவ்வாறே இறக்குமதி செய்ய முடியும் எனவும் கூறியிருக்கின்றேன்.
அந்தவகையில்தான் இறக்குமதி செய்ததாக கூறுகிறார்கள். அதில் முறைகேடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவ்வாறு இருக்குமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆனால் ஊடகங்களில் தவறான செய்திகள் வந்திருக்கின்றது. இது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன். தவறுகள் ஏதும் கிடைக்கவில்லை.
அத்டதுடன் இன்று நாடு இருக்கின்ற நிலையிலும் உலகத்தினுடைய போக்குகள் யுத்தங்கள் சூழ்ந்திருக்கின்ற சூழலில் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாமல் தான் இருக்கிறது. இது அனைவரையும் பாதிக்கிறது. ஆகையால் அதிலிருந்து நாங்கள் மீள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
