டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அரையிறுதிக்கு நுழைவதை தீர்மானிக்கும் சுப்பர் 12 சுற்றின் இரு குழு 1 போட்டிகள் இன்று (04) நடைபெறவுள்ளன.
அடிலைட்டில் நடைபெறும் போட்டிகளில் நியூசிலாந்து அணி அயர்லாந்தை எதிர்கொள்ளவிருப்பதோடு அவுஸ்திரேலிய அணி ஆப்கானுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதில் ஆப்கான் மற்றும் அயர்லாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்திருக்கும் நிலையில் இந்த இரு அணிகளில் ஒன்றின் வெற்றி இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க உதவியாக அமையும்.
இலங்கை அணி குழு ஒன்று புள்ளிப் பட்டியலில் தற்போது நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று நான்கு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் இருக்கும் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தலா ஐந்து புள்ளிகளுடன் உள்ளன.
இதன்படி நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை அதிகரிப்பதற்கு இன்றைய போட்டியில் வெல்வது கட்டாயமாகும். இதில் ஒரு அணி இன்றைய போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் இலங்கை அணி நாளை நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டினால் அரையிறுதிக்கு முன்னேற முடியுமாக இருக்கும்.
ஆனால் இன்றைய தினத்தில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் வெற்றியீட்டினால் இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற வேண்டி ஏற்படும்.
இது தவிர, இன்றைய தினம் ஒரு போட்டியேனும் மழையால் கைவிடப்பட்டாலும், இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்தை வீழ்த்தினால் போதும் என்ற நிலை ஏற்படும். அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் டிம் டேவிட் இருவரும் காயத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இவர்கள் இன்றைய போட்டியில் களமிறங்குவது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. பின்ச் விளையாடாத பட்சத்தில் விக்கெட் காப்பாளர் மத்தியு வாடே தலைவராக செயற்படுவார். ஆப்கான் அணியிலும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் காயத்திற்கு உள்ளான நிலையில் இன்றைய போட்டியில் ஆடுவதில் சந்தேகம் உள்ளது.
சுப்பர் 12 சுற்றில் ஆப்கான் அணியின் இரு போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையிலேயே அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுக்க அந்த அணி முயற்சிக்கும்.
அவுஸ்திரேலிய அணியின் நிகர ஓட்ட விகிதம் குறைவாக இருக்கும் சூழலில் அந்த அணி அதிக இடைவெளியில் வெற்றி பெற்றாலே நிபந்தனை இன்றி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியுமாக இருக்கும். இல்லாவிட்டால் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தமக்கு சாதகமாகும் வரை எதிர்பார்க்க வேண்டி இருக்கும்.
ஆப்கான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இதுவரை டி20 போட்டிகளில் ஆடியதில்லை என்றபோதும் முன்று முறை சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளன. அவை அனைத்திலும் அவுஸ்திரேலியாவே வென்றது.
இம்முறை உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி ஏற்கனவே தமது திறமையை வெளிப்படுத்தி இருக்கும் அயர்லாந்து அணி தொடரில் வலுவான அணியாக இருக்கும் நியூசிலாந்துக்கு எதிராக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த இன்று முயற்சிக்கும்.










