இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டுவருகின்றது எனவும், தமிழ்ப் பிரிவினைவாதிகளை மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் சந்தித்துள்ளார் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையென்பது சிங்கள, பௌத்த நாடாக இருந்தபோதிலும் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கே அநீதி இழைக்கப்படுகின்றது.
வடக்கில் 25 ஆயிரம் வரையிலான சிங்கள குடும்பங்கள் இருந்தன. இன்று ஒருவர்கூட இல்லை. மட்டக்களப்பிலும் சிங்களவர்கள் இல்லை.
கொழும்பில் முஸ்லிம் மற்றும் தமிழர்களே வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றனர். இதற்கு சிங்களவர்கள் தடை ஏற்படுத்துவதில்லை. நிலைமை இப்படி இருந்தும் சிங்களவர்களுக்கே இனவாத முத்திரைக் குத்தப்படுகின்றது.
அதிகாரத்துக்காக தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இனத்தைக் காட்டிக்கொடுத்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இராணுவ அமைப்பு மற்றும் தேசியவாத அமைப்புகளுடன் சந்திப்பு நடத்தவில்லை. தமிழ்ப் பிரவினைவாதிகளை மட்டுமே சந்தித்தார். இரு தரப்புகள் இருப்பதை அரசாங்கம் அவருக்கு சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.” – என்றார் சரத் வீரசேகர.