ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியின்கீழ் இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தன்னை சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன நாடாளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜியின் வாழ்த்துக்களை இதன்போது சீனத் தூதுவர் இலங்கையின் புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கலாநிதி அசோக ரன்வலவிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்ட கால ஒத்துழைப்புக்களை நினைவு கூர்ந்த புதிய சபாநாயகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான புதிய அரசாங்கத்திலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர் குறிப்பிடுகையில், இரு நாடுகளின் சட்டவாக்க நிறுவங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும், புதிய நாடாளுமன்றத்திலும் இலங்கை – சீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், பொருளாதார அவிபிருத்தி, கலப்பின விதைவகைகளை விருத்தி செய்தல் உள்ளிட்ட விவசாயம் சம்பந்தப்பட்ட விடயங்கள், நீர் முகாமைத்துவம், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
