இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தம்புள்ளையில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் இலங்கை – மலேசியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 184 ரன்கள் குவித்தது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக தலைவி சமரி அத்தபத்து 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மலேசியா தரப்பில் வினிப்ரெட் துரைசிங்கம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மலேசியா அணி வீராங்கனைகள் இலங்கயின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதில் வான் ஜூலியா 3 ரன், எல்சா ஹண்டர் 10 ரன், மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில் 7 ரன், ஐன்னா ஹமிசா ஹாஷிம் 3 ரன், ஐஸ்யா எலீசா 1 ரன், அமலின் சோர்பினா 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

19.5 ஓவர்கள் பேட்டிங் செய்த மலேசியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 144 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணியினர் மலேசியாவை 40 ரன்களில் சுருட்டினர். இலங்கை தரப்பில் ஷஷினி கிம்ஹானி 3 விக்கெட், கவிஷா தில்ஹாரி, காவ்யா காவிந்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ஆசியக் கிண்ண மகளிர் இருபதுக்கு 20 தொடரில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை இலங்கை அணி தலைவி சமரி அத்தப்பத்து படைத்துள்ளார். 69 பந்துகளில் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 119 ஓட்டங்களைப் பெற்றார்.
May be an image of 1 person and text

Related Articles

Latest Articles