இஸ்ரேலின் ஊடுருவல் தோல்வி: 8 படையினர் பலி!

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படை, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறி ஹிஸ்புல்லா மீதும் சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து லெபனானுக்குள் நுழைய இஸ்ரேலிய படைகள் முயன்றன. ஆனால் ஹிஸ்புல்லா கொடுத்த பதிலடியில் இஸ்ரேல் வீரர்கள் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனவே ஊடுருவல் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் எப்போதும் பஞ்சாயத்து வெடித்துக் கொண்டே இருந்து வந்திருக்கிறது. காரணம், ஆக்கிரமிப்புதான். பாலஸ்தீன பகுதியை இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. இந்த போராட்டத்தில் ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு, ஆக்கிரமிப்பை எதிர்த்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

காலங்காலமாக அடி வாங்கியே வந்த, பாலஸ்தீனம் முதல் முறையாக பெரியதாக திருப்பி அடித்திருந்தது, இஸ்ரேல் முகத்தில் கரியை பூசியதை போன்று ஆகிவிட்டது. இருக்க இடம் கூட இல்லாதவர்கள் எங்களை தாக்குவதா? என கொக்கரித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸை முற்றிலுமாக அழிக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என்று அறிவித்தார்.

காசா மீதான தாக்குதல்கள் முன் எப்போதையும் விட தீவிரமடைந்தது. 41,000க்கும் அதிகமான மக்கள் இந்த ஓராண்டில் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். பெண்களும், குழந்தைகளும் தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால், ஹமாஸ் ஒழிக்கப்படவில்லை. ஆக போருக்கான காரணம், ஹமாஸ் அல்ல.. இஸ்ரேலின் காழ்ப்புணர்ச்சிதான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

இப்போது காசாவை தொடர்ந்து லெபனானையும் தாக்க இஸ்ரேல் முன்வந்திருக்கிறது. காரணம், ஹமாஸ் படைகளுக்கு ஹிஸ்புல்லா எனும் அமைப்பு உதவியதுதான். ஹிஸ்புல்லா என்பது ஈரான் ஆதரவு பெற்ற, லெபனானை சேர்ந்த ஒரு பாலஸ்தீன ஆதரவு இயக்கமாகும். இது ஹமாஸை விட அதிநவீன ஆயுதங்களை கொண்டிருக்கும் அமைப்பாகும். எனவே, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா தாக்குதல் தீவிரமடைந்தன. லெபனானில், ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேல் வெடிக்க வைத்தது.

இதில் 2,000க்கும் அதிகமான ஹிஸ்புல்லா வீரர்கள் படுகாயமடைந்தனர். 20 பேர் வரை உயிரிழந்தனர். மட்டுமல்லாது வான் வழியாகவும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்ல நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் உட்பட பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். தொடர் வெற்றியையடுத்து லெபானுக்குள் தரைவழியாக ஊடுருவுவதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வந்த இரவே, இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் ராணுவ தளங்கள் சில தரைமட்டமாகின.

இனியும் தாமதித்தால் தங்களை வேலைக்கு ஆகாத நாடு என்று சொல்லிவிடுவார்கள், என யோசித்த இஸ்ரேல், லெபனானுக்குள் நுழைய முயன்றது. ஆனால், எல்லையிலேயே இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 8-10 இஸ்ரேல் ராணுவ துருப்புகள் உயிரிழந்துள்ளன. 70 வீரர்கள் வரை படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய தோல்வியாகும்.

அதிபர் கூட இல்லாத நாடுதான் லெபனான். அந்த நாட்டில் கூட இஸ்ரேல் படைகளால் நுழைய முடியவில்லை எனில், அப்புறம் என்ன பெரிய சக்தி வாய்ந்த ராணுவம்? என இஸ்ரேல் மீது விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளன. அதேநேரம், கடந்த ஓராண்டாக இஸ்ரேல் ஆடிய ஆட்டத்திற்கு ஹிஸ்புல்லாவும், ஈரான் தக்க பதிலடி கொடுத்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.

Related Articles

Latest Articles