ஹமாஸ் மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையே தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும், நூற்றுக்கணக்கனோர் படுகாயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர ஆலோசனை ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் களமிறக்கப்பட்டு, “ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்“ என்ற பெயரில், ஹமாஸ் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்கான உரிமைக்கு முழு அளவில் ஆதரவளிக்கிறோம் என்றும் கூறினார். பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒரு போதும் நியாயம் இல்லை எனக்கூறிய அவர், இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் பைடன் கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் கூறினார்.










