இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்படபல நகரங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் ராணுவ தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன.
‘ஈரான் 60 சதவீதம் தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ளது. இதை 90 சதவீதம் செறிவூட்டினால் ஈரான் விரைவில் 9 அணுஆயுதங்களை தயாரித்துவிடும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில், சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கடந்த மே 31-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து, அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு முடிவடைந்தது. இதற்கிடையே, அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்நாட்டின் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் விமானப்படையின் 200 போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 9 அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். 320 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இஸ்ரேல் மீண்டும்ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 150 இடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் ராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களிலும் சைரன் மூலம்மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பீதியடைந்த மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர்.
எதிரி நாடுகளின் வான் தாக்குதலை சமாளிக்க அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்தி வந்தது. இந்த ஏவுகணைகள் நேற்று முன்தினம் இரவு முதல் வானில் சீறிப் பாய்ந்தன. ஆனால், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலை, இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணைகளால் முற்றிலும் தடுக்க முடியவில்லை.
இதனால், டெல் அவிவ் நகரில் உள்ள ராணுவ தலைமையகம் மீது குண்டுகள் விழுந்து வெடித்தன. ஜெருசலேம் நகர், ரிசான் லெசியான் ஆகிய பகுதிகள் மீது நேற்று அதிகாலை ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனி கூறும்போது, ‘‘இஸ்ரேலுடன் போரிட ஈரான் ராணுவ படைகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் அனைவரும் ராணுவத்துக்கு ஆதரவாக உள்ளனர்’’ என்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியபோது, ‘‘இன்னும் சில மாதங்களில் ஈரானால் அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும். இது இஸ்ரேலுக்கு ஆபத்து. அதனால்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் மீதான தாக்குதல் தொடரும்’’ என்றார்.
இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடாவ் ஷோசானி கூறுகையில், ‘‘ மத்திய கிழக்கில் தற்போதைய பதற்றத்துக்கு காரணம் ஈரான். அணு ஆயுதங்களை தயாரித்து இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டமிடுகிறது. அதனால்தான், அணு ஆயுத தளங்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தினோம். இஸ்ரேலில் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது’’ என்றார்.
இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று கூறியபோது, ‘‘ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால், அதற்கான கடும் விளைவுகளை ஈரான் மக்கள் சந்திப்பார்கள். தலைநகர் டெஹ்ரான் பற்றி எரியும்’’ என்று தெரிவித்தார். இரு நாட்டின் தலைவர்களும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா கருத்து: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியபோது, ‘‘ஈரானுக்கு பல வாய்ப்புகள் அளித்தேன். அப்போதே, என் பேச்சை கேட்டிருக்க வேண்டும். ஈரானில் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பாக, அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஐ.நா சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியானுடன் அவர் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார். இரு நாடுகள் இடையிலான பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புதின் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு: இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரே நாளில் பேரலுக்கு 6 டாலர் உயர்ந்து 78 டாலரானது. இதன்மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு சென்றது. எனினும், இறுதியில் 74 டாலராக நிறைவடைந்தது. இந்த போர் தீவிரமானால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என தெரிகிறது.
இதுகுறித்து எஸ் அன்ட் பி குளோபல் தலைவர் ரிச்சர்டு ஜோஸ்விக் கூறியதாவது: இஸ்ரேல் – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்பதுதான் முக்கியம். கடந்த முறை ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பின்னர், போர் தீவிரமடையவில்லை என்றும், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிந்தவுடன் அவற்றின் விலை சரிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
ஈரானிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவில்லை. ஆனாலும், நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த சூழலில், இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சரக்கு போக்குவரத்து தடைபட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, உலக அளவிலான கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தில் 20% ஈரானுக்கு வடக்கே உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. இதனால், இராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.