‘உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார். ஆனால் எங்களுடைய லட்சியங்கள் ஈடேறும்வரை போர் தாக்குதல் தொடரும்.” – என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்த நிலையில் அந்நாடுமீது ரஷ்யா போர் தொடுத்தது.
3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி கொடுத்தும், ஆயுதங்கள் வழங்கியும் உதவி வருகின்றன.
ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா ஆட்களை அனுப்புகிறது. சீனா மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது.
இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று 2-வது முறையாக அந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
முன்னதாக தேர்தல் வாக்குறுதியின்போது ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதாக அறிவித்தார்.
அதன்படி ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து நேரலையில் உரையாடி அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும் போரை உடனடியாக கைவிடுமாறு எச்சரித்தார்.
ரஷிய ஜனாதிபதி புடினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் போர் நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் பல நாடுகள் இந்த போரை நிறுத்த தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.
இருப்பினும் எதற்கும் செவி சாய்க்காமல் இருநாடுகளும் தீவிரமான போர் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபடுகிறது.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது ரஷியாவை உடனடியாக போர் தாக்குதலை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக 50 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
மேலும் அதனை மீறி போர் தாக்குதலை நீடித்தால் கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே ரஷியாவின் அதிகாரப்பூர்வ அரசு தலைமையிடமான கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பத்திரிகையாளர்களை சந்திந்தார்.
அப்போது அவர் உக்ரைனுடன் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தார்.
‘ உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார். ஆனால் எங்களுடைய லட்சியங்கள் ஈடேறும்வரை போர் தாக்குதல் தொடரும். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதை தவிர்க்க வேண்டும்.
எல்லை மீறி ஆக்கிரமித்த பகுதிகளை சுதந்திரமாக அறிவிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளுடனான தொடர்பை துண்டித்து ராணுவத்தை குறைத்தால் நாங்கள் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார்.” – என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.