உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புட்டினின் உத்தரவை தொடர்ந்து 7ஆவது நாளாக ரஷ்யாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றது. குறிப்பாக, பொலிஸ் அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்குகின்றனர்.
இந்நிலையில், சைடோமிர் நகரிலுள்ள மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட 10 கட்டடங்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், மருத்துவமனையிலிருந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாக அவசரகால மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா – உக்ரைன் இடையே முதல்கட்ட பேச்சு நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.