சேதனப் பசளை விவகாரத்தால் சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது இரு தரப்பினருக்கிடையிலான வர்த்தக நடவடிக்கையே. மாறாக இராஜதந்திர நகர்வு அல்ல – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ உரப்பிரச்சினையானது இராஜதந்திர பிரச்சினை அல்ல. அதேபோல இரு அரசுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையும் கிடையாது. வர்த்தக – கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும். வழக்கு தொடுப்பதற்கு சீன நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளது. இவ்விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி ஆழமாக கருத்துரைக்க முடியாது. இது சீன அரசு போட்ட வழக்கும் கிடையாது.”- என்றார்.










