” மலையக மக்களின் பிரச்சினைகளை தேசிய மயப்படுத்தி, அவற்றை அரசாங்க பொறிமுறைக்குள் உள்வாங்கி உரிய வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க கடந்த நான்கரை வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி நடவக்கை எடுத்தது. அதுமட்டுமல்ல உரிமை அரசியலுக்கும் உயிர் கொடுத்தது. எனவே, எமது பயணத்தை பொதுத்தேர்தலில் மக்கள் மேலும் பலப்படுத்த வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் வேலுகுமார் மேலும் கூறியதாவது,
“கடந்த 2015 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எமது மலையக மக்கள் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கினர். 15 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் வென்றெடுத்தனர்.
எம்மக்களின் ஆணையை ஏற்று, அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமை மேம்படுத்துவதற்காக நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் முன்னெடுத்தோம். கண்டி மாவட்டத்திலும் உரிமை மற்றும் அபிவிருத்தி அரசியல் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் இருந்த சில சரத்துகள் – குறிப்பாக 33 ஆம் சரத்தானது தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு பெரும் தடையாக இருந்துவந்தது. இச்சட்டத்தின் பிரகாரம் தோட்டப்பகுதியானது தனியார் பகுதியாக – தனிப்பட்ட பகுதியாக கருதப்பட்டதால் அபிவிருத்திகளுக்கு அரசால் நிதி ஒதுக்கப்படவில்லை.
இதனால், அரச நிறுவனங்களாலும் உரிய சேவைகளை வழங்கமுடியாத நிலை இருந்தது. உள்ளாட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை அனுப்பினாலும் எதனையும் செய்யமுடியாது. உளளாட்சி சபைத் தேர்தலில் நாம் வழங்கும் வாக்குகள் வெத்து வேட்டுகளாகவே இருந்தன. தோட்டப்பகுதிக்கு பாதை அமைத்ததால் – அதனை சட்டத்துக்குபுறம்பான செயலாக கருதி பிரதேச சபை கலைக்கப்பட்ட கசப்பான வரலாறும் இருக்கின்றது. இதனை நாமே மாற்றியமைத்தோம்.
அதேவேளை, எமது மக்களுக்காக வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி சிறந்த உறவை பேணியது. இதன்பயனாகவே 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு பாரத பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார். அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 900 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் இந்தியா முன்வந்தது. இவ்வாறு எமது சமூக விடுதலைக்காக தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் ஆகிய விதைகள் தமிழ் முற்போக்கு கூட்டணியால் விதைக்கப்பட்டன.
