உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று வெளியானது.
இதில் இலங்கையின் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஸக்களின் நெருங்கிய உறவினரும், மகிந்த ஆட்சிக் காலத்தில் பிரதியமைச்சர் பதவி வகித்தவருமான நிருபமா ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நிருபமா ராஜபக்ச பிரதி நீர்வளங்கள் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

இந்த ஆவணங்கள் வெளியானது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும் தகவலின் இரகசிய ஆவணங்கள், 2016ல் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் போன்செகா, ஒரு கோடிக்கும் அதிகமான இரகசிய ஆவணங்களை, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் 2016ல் வெளியிட்டது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தனர். பல தனி நபர்கள், நிறுவனங்களின் முறைகேடுகள் இதில் வெளியாகின. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் அதேபோல் நேற்று பென்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
பாகிஸ்தான் அமைச்சர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளதாகவும், அறக்கட்டளை என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மற்றும் அவரது மனைவி ஷெரி பிளேயர் , ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் . செக் குடியரசு பிரதமர் எண்ட்ரேஸ் பாபிஸ், கென்ய ஜனாதிபதி உஹுரு உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சைப்ரஸ் நாட்டு ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்தேசியேட்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ உட்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் செய்துள்ள முறைகேடுகள் குறித்த ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கையில் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஸக்களின் நெருங்கிய உறவினருமான நிருபமா ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










