இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசியல் கலாசாரம் மாற்றப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை முறையாக செயற்படுத்தாததால்தான் பழைய அவதாரங்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அதன்மூலம் அவர்கள் பக்கம் மக்கள் திரும்பிவிட்டனர் என்பது பொருள் அல்ல.
தேசிய மக்கள் சக்திமீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால்தான் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களின்போது மக்களால் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கப்பட்டது.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வென்றிருப்பதால் மக்கள் தேசிய மக்கள் சக்திமீதான நம்பிக்கையை முழுமையாக கைவிடவில்லை என்பதும் தெரிகின்றது.
பெரும்பாலான சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய ஆணையை தேசிய மக்கள் சக்தியே பெற்றுள்ளது. 267 சபைகளில் அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. எனவே, ஆட்சி அமைப்பதற்குரிய தார்மீக உரிமை அக்கட்சிக்கே உள்ளது. இதனை ஏனைய கட்சிகள் இணைந்து சூழ்ச்சிமூலம் இல்லாது செய்யக்கூடாது. அதற்கு நாம் ஆதரவளிக்கமாட்டோம்.
அதேவேளை, நாட்டின் தற்போதைய அரசியல் வேலைத்திட்டத்தை எடுத்துக்கொண்டால் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் ஒரேமாதிரியான அரசியல், பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு இணங்கியுள்ளன. அவர்களுக்கிடையில் எவ்வித வேறுபாடும் இல்லை.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பாகவும் ஒருமித்த கொள்கையிலேயே உள்ளன. ஐ.நா. தலையீடு தொடர்பான நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை.
ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை, தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் இவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளன.
எனவே, நாட்டில் தற்போது இரு அரசியல் அணிகள்தான் உள்ளன. ஒன்று வலதுசாரிகள் ஓரணியில் உள்ளனர். வலுவான இடதுசாரியாக நாம் போராடுவோம்.”- என்றார்.










