ஊரடங்குச் சட்டம் அமுலில் இந்த சந்தர்ப்பத்தில் உறவினர்கூடி, நடத்தப்பட்ட திருமண வைபத்தில் 35 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 13 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இந்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
காரைநகர் பகுதியில் கடந்த 1ஆம் திகதி , ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில் பந்தல் அமைத்து, உறவினர் கூடி, திருமண நடத்தப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைகள் பின்பற்றாது இந்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
திருமணத்தில் எடுத்துக்கொண்ட படங்களையும் முகநூலில் அன்றைய தினமே திருமணத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர் பகிர்ந்து கொண்டனர்.
அதில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காது பலர் திருமணத்தில் கலந்து கொண்டமை உறுதியானதை தொடர்ந்து, சுகாதார பிரிவினர் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் திருமணத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினர்.
ஊரடங்கு அமுலில் உள்ள போது சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் நடாத்தப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் 5 வயது தொடக்கம் 15 வயதுக்கு உட்பட 13 சிறுவர் உள்ளிட்ட 35 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த முயற்சித்தபோது சுகாதார வைத்திய அதிகாரி , பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 03 பேர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.