ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு திருத்தங்கள் முன்மொழிவு

நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சார்பில் பாலியல் இலஞ்சம் தொடர்பான எண்ணக்கரு, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மகிழ்ச்சியடைவதாக, ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், நாளை இடம்பெறவுள்ள விவாதத்திற்கு முன்னர் மறுசீரமைக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “பாலியல் நாட்டம்” எனும் குற்றத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், “நாட்டம்” என்பதன் மூலம் குற்றம் சிறிதாக்கப்படுவதாகவும், அதற்குப் பதிலாக “பாலியல் இலஞ்சம்” எனும் பதம் மூலம் குற்றத்தின் தீவிரத்தன்மை சிறந்த முறையில் காட்டப்படுவதால், அதனை பயன்படுத்துமாறும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “இலஞ்சம் சம்பந்தமாக, இலஞ்சம் வழங்கும் நபர் ஒருவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்” எனும் கருத்தைக் கொண்ட பிரிவைக் காரணமாகக் கொண்டு, “பாலியல் இலஞ்சம்” என்பதில் உள்ள பாலினம் காரணமாக, பாலியல் இலஞ்சம் தொடர்பில், இலஞ்சம் வழங்கும் நபருக்கு அநீதி இழைக்கப்படக்கூடும் என சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பாலியல் இலஞ்சம் வழங்கும் நபருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில், விதிவிலக்கொன்றை உள்வாங்குமாறு கோரிக்கை விடுப்பதாக பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles