ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, இந்தியா பதலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இந்தியா குறிவைக்கப்பட்டுள்ளது.
உண்மையில், மோதல் வெடித்த பிறகு, வழக்கமாக கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பாவுக்கு திருப்பி விடப்பட்டதால் தான் ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியது.
உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக அந்த நேரத்தில் இந்தியாவின் இத்தகைய இறக்குமதிகளை அமெரிக்கா தீவிரமாக ஊக்குவித்தது.” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறக்குமதிகள் என்பது இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிபொருள் செலவுகளை உறுதி செய்வதற்காக மட்டுமே ஆகும். இது உலகளாவிய சந்தை சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்படும் ஒரு தேவையாகும். இருப்பினும், இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளே ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. ரஷ்யாவுடன் அவர்கள் மேற்கொள்ளும் வர்த்தகம் என்பது எங்களைப் போல் தேச நலனுக்கான கட்டாயம் கூட அல்ல.
ஐரோப்பா – ரஷ்யா வர்த்தகத்தில் எரிசக்தி மட்டுமல்ல, உரங்கள், சுரங்கப் பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களும் அடங்கும்.
எனவே, இந்த விவகாரத்தில், இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது. எந்தவொரு பெரிய நாடுகளின் பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் தனது நாட்டின் நலன்களையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் 100 சரக்கு கப்பல்கள் மற்றும் நயாரா நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. தற்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
