” எதிரணிகளின் ஒன்றிணைவானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவால் கிடையாது. கள்வர்களைக் காப்பதற்காகவே அவர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர்.”
இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று போராட்டங்களில் ஈடுபடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிரணிகள் திட்டமிட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” கடந்த காலங்களிலும் எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்பட்டன. எவ்வித சவாலும் ஏற்படவில்லை. கூட்டு சேர்ந்துள்ளவர்களில் 90 சதவீதமானோருக்கு வழக்குகள் உள்ளன. எனவேதான் குற்றமிழைத்தவர்கள் தம்மை தற்காத்துக்கொள்ள கூட்டு சேர்ந்துள்ளனர். எனினும், சட்டம் தனக்குரிய கடமையை உரிய வகையில் செய்யும். சட்டமென்பது அனைவருக்கும் சமம்.
சட்டத்தை செயற்படுத்தும்போது அதற்கு எவரேனும் தடையேற்படுத்த முற்பட்டால் அது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகவே அமையும்.” – எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.










