” நான் ஏமாந்தது போல் எந்த பெண்ணும் ஏமாந்து விடவேண்டாம்.” என நடிகை ஷகிலா உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா.
கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும் உண்டு. கவர்ச்சி உடையில் ஷகிலா தோன்றும் சுவரொட்டிகள் வீதியெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகி உள்ளது.
ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் லங்கேஷ் இயக்கி உள்ளார்.
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘ஷகிலா’ இந்த திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று சென்னையில் ஷகிலா படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இதில் நடிகை ஷகிலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
” என்னைப் பற்றி யாராவது தவறாக கூறினால் நான் அதனை பெரிதாக நினைத்து கவலைப்படுவதில்லை. ஏனென்றால் என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்தது இல்லை. அதனால் தான் நான் அதை பற்றி கவலைப்படவில்லை
நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நான் என்னுடைய வாழ்க்கையில் செய்த தவறுகளை இனி வரும் நடிகைகளும், படித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களும் செய்யக்கூடாது என்ற ஒரு மெசேஜை இந்த படத்தின் மூலம் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் அதைத்தான் கூறியுள்ளேன். இந்த மெசேஜ் பெண்களுக்கு போய் சேர்ந்தாலே எனக்கு திருப்திதான்
இந்த படத்தில் சுவாரஸ்யத்திற்காக சில காட்சிகளை இணைத்து உள்ளார்கள். ஆனால் சொல்ல வரும் விஷயம் இதுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ஷகிலா கூறியுள்ளார்.