ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
‘ தேசிய மக்கள் சக்தியானது தன்னை இடதுசாரி அரசியல் இயக்கமாகவே காட்டிக்கொள்கின்றது. ஆனால் அக்கட்சியினரின் பயணம் வேறு விதமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக ஜெனிவாவில் கூறப்படும் அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.
ஒற்றையாட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை பலிகடாவாக்குவதற்கான சட்டமூலத்தையும் கொண்டுவர முற்படுகின்றனர். இவ்வாறு ஜெனிவா தாளத்துக்கு அமைய ஆடும் இந்த அரசாங்கத்தை எப்படி இடதுசாரி அரசாங்கம் என சொல்வது?” – எனவும் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
