எமது அரசுமீது இனவாத முத்திரை குத்த வேண்டாம்!

” தேசிய மக்கள் சக்தியென்பது இன நல்லிணக்கத்துக்காக செயற்படும் அரசாங்கம். எனவே, எம்மீது இனவாத முத்திரை குத்த வேண்டாம்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு சபையில் உரையாற்றுவதற்கு நேரம் வழங்கப்படாமை ஜனநாயக விரோதச் செயலாகும் எனவும், இதற்கு பிரதான எதிர்க்கட்சியே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அர்ச்சுனா எம்.பி. எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை தொடர்பில் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியதாவது,

‘நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்படாமை ஜனநாயக விரோதச் செயலாகும். எதிர்க்கட்சி தலைவர், எதிரணி பிரதம கொறடா உள்ளிட்ட எதிரணியினரே இதனை செய்கின்றனர். அவருக்கு (அர்ச்சுனாவுக்கு) நேரம் ஒதுக்க வேண்டியது எதிர்க்கட்சி தலைவருக்குரிய பொறுப்பாகும்.

எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் அர்ச்சுனாவுக்கும் இடமளிக்கப்பட வேண்டும். அவருக்குள்ள கருத்து சுதந்திரத்துக்காக நாம் முன்னிற்போம். நாடாளுமன்றத்திலுள்ள குழுக்களில் எதிரணி உறுப்பினர்களுக்கு நாம் இடமளித்து வருகின்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அவர் சபை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும்.

இன நல்லிணக்கத்துக்காக செயற்படும் அரசாங்கமே எமது அரசாங்கமாகும். இங்கு தமிழ், சிங்களம் என்பது பிரச்சினை கிடையாது. எனவே, எம்மீது இனவாத கோணத்தில் விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles