மின்வெட்டு மற்றும் டீசல் தட்டுப்பாட்டால் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தோட்டப்பகுதிகளில் பறிக்கப்படும் கொழுந்துகள், லொறிகளில் ஏற்றப்பட்டு தொழிற்சாலைகளுக்கு எடுத்துவரப்படும். அங்கு வைத்து அரைத்தே தேயிலையாக மாற்றப்படுகின்றது. இதற்காக இராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நாட்டில் தற்போது நீண்டநேரம் மின்வெட்டு அமுலில் இருப்பதால் இவ்வியந்திரங்கள் இயங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்பிறப்பாக்கியை செயற்படுத்துவதற்கான டீசலை பெறமுடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது. இதனால் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
எனவே, தேயிலை தொழிற்சாலைகளுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பேச்சு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
