அரசாங்கம் வரி அறவிடும்போது வசதி உள்ளவர்களிடம் அதனை அறவிட வேண்டுமே வரிச்சுமையை ஏழை மக்களிடம் திணிக்கக்கூடாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” வரி சுமை ஏழை மக்களிடமிருந்தும் அறவிடுவதால் அந்த மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் வரி அறவீட்டில் வசதி குறைந்த மக்கள் பாதிக்கப்படாதவகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத் துறை பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அந்த துறையில் தொழில் செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா தொற்று பரவலே இதற்கு காரணமாகும்.
அதிகமானவர்கள் விவசாய துறையில் ஈடுபடுபவர்கள். அவர்களுக்கு தேவையான உரம் கிடைப்பதில்லை. அதனால் விவசாயத்தை முறையாக மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்படவேண்டும். தற்போது இருக்கும் வாழ்க்கைச்செலவுக்கு ஏற்ற வருமானம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் விவசாயம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள்.
இதேவேளை இறைச்சிக்காக பசுக்கள் அறுப்பதை நிறுத்த பிரதமர் எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது.” என்றும் அவர் கூறினார்.