ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 30 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்கள் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ஓட்டங்களைக் குவித்தது. இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிர ஓட்டங்கள் குவித்த அணி என்ற தங்கள் முந்தையை சாதனையை ஐதராபாத் மீண்டும் தகர்த்தது.
பின்னர் இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு போராடி 262 ஓட்டங்கள் வரை எடுத்தது. இதன் மூலம் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்துவீச்சை ஐதராபாத் அணியை சேர்ந்த துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் 20 ஓவர்கள் வரை விடாது வெளுத்து வாங்கினர்.
சிறப்பாக பந்துவீசினார் என்று ஒருவரை கூட சொல்ல முடியாத அளவுக்கு அனைவரும் எதிரணிக்கு ஓட்டங்களை வாரி வழங்கும் வள்ளலாகவே திகழ்ந்தனர்.
அத்துடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் பந்துவீச்சில் மோசமான சாதனை ஒன்றையும் தன்வசப்படுத்தியுள்ளனர். அதாவது, பெங்களூரு அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் டாப்லே (68 ரன்), யாஷ் தயாள் (51 ரன்), பெர்குசன் (52 ரன்), விஜய்குமார் வைசாக் (64 ரன்) ஆகியோர் ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர். 20 ஓவர் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.