ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் வராது எனவும்,மாகாணசபைத் தேர்தலின்போது கட்சி மீண்டெழும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் வேண்டும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அஜித் பி. பெரேரா எம்.பி.,
” ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படுகின்றார். அதில் மாற்றம் வராது.
நாடாளுமன்ற தேர்தலைவிடவும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் சிறந்த பெறுபேறு கிட்டியுள்ளது. மாகாணசபைத் தேர்தலில் தனிக்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மீண்டெழும்.
கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு சஜித்தால் ஏற்பட்டது அல்ல. கோட்டாபய ராஜபக்ச தப்பியோடியதால்தான் புதிய தரப்பொன்றுக்கு ஆட்சியை வழங்கும் முடிவை மக்கள் எடுத்தனர்.
கட்சியில் நிர்வாக தரத்தில் மாற்றம் வரும். ஆனால் தலைமைப்பதவியில் மாற்றம் வராது.” – என்று குறிப்பிட்டார்.
அத்துடன், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது. தோல்வி பயத்தால் அதனை பிற்போடுவதற்கு முற்படுகின்றது. எனினும், தேர்தலை நடத்துமாறு சர்வதேச மற்றும் சமூக அழுத்தங்கள் வரக்கூடும்.” – என அஜித் பி பெரேரா மேலும் குறிப்பிட்டார்.










