ஒரே மாதிரி தற்கொலை செய்துகொண்ட எழுவர் – மாலபே சம்பவம் குறித்து வெளியாகும் பகீர் தகவல்கள் ! மக்களே அவதானம்…..!

மாலபே பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில், மேலும் இருவர் அவ்வாறே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன், மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையொன்றையும் விடுத்துள்ளனர்.

மூட நம்பிக்கை தொடர்பில் கருத்துகளை விதைத்து தற்கொலை ஊக்குவிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை இடம்பெறுகின்றது.

நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட   ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள், மாலபே, காஹன்தொட்ட பகுதியில் டிசம்பர் 30 ஆம் திகதி அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

35 வயதுடைய தாய், 9 மற்றும் 7 வயதுகளுடைய இரு மகன்மார் மற்றும் 6 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர்.

குறித்த பெண்ணின் கணவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் இறுதிக்கிரியைகள் டிசம்பர் 29 ஆம் திகதி நடந்துள்ளன.

இந்தநிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.

பொலன்னறுவை பகுதியில் உள்ள இவர்களின் காணியை விற்பனை செய்துவிட்டு வெளிநாடு செல்வதற்கும் முற்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஹேமாகம பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளனர். அந்த வீட்டில் வைத்தே கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரின் இறுதிச்சடங்கு மாலபே பகுதியில் உள்ள அவரின் சகோதரரின் வீட்டில் நடந்தது. அந்த வீட்டில் வைத்தே குடும்பத்தார் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ருவான் பிரசன்ன குணரத்ன என்ற 46 வயது நபர் (மேற்படி குடும்பத்தின் தலைவர்) ஆன்மீக போதனைகளில் ஈடுபட்டுவந்துள்ளார். மரணம் பற்றியே அவர் போதனைகளின்போது அதிகம் பேசியுள்ளார். இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களிலும் உள்ளன.

இவரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்றிருந்த 35 வயது இளைஞர் ஒருவரும், 21 யுவதி ஒருவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. அவர்களும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றனர். மேற்படி நபரின் போதனைகளில் இவர்கள் இருவரும் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

இவ்வாறு (நஞ்சருந்து) தற்கொலை செய்து கொள்வதன் மூலம் அடுத்த ஜென்மத்திற்கு விரைவாகச் செல்ல முடியும் என்ற தவறான கருத்தை அவர் விதைத்துள்ளார் என புலனாய்வு பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நஞ்சு என்ன வகையை சேர்ந்தது என்பது தொடர்பில் இரசாயன பரிசோதனை இடம்பெறவுள்ளது.

அதேவேளை, குறித்த நபரின் போதனைகளில் எவரேனும் பங்கேற்றிருந்தால் அவர்கள் தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

குறிப்பு – ( தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. மூட நம்பிக்கைக்கு அடிபணிந்து தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனமான முடிவாகும். பொறுப்பும், பொதுநலன் கருதியுமே இந்த செய்தி பதிவிடப்பட்டது. )

Related Articles

Latest Articles