தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நடை பயணத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” நாம் நாடோடிகளாக சொந்த மண்ணை விட்டு மலையகத்தில் தடம் பதித்து இருநூறு வருடங்கள் ஆகிவிட்டன. எனினும், இன்றும் உரிமைகள் இல்லாத நாடற்ற சமூகமாகவே வாழ்கின்றோம்.
மலையகம் இருநூறு நிறைவை ஒட்டி தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருக்கும் நுவரெலியா தொடக்கம் தலவாக்கலை வரை எனும் நடைப் பயணத்தில் கட்சி பேதமின்றி , இன பேதமின்றி மதகுருக்கள், புத்தஜீவிகள், ஊடகவியலாளர்கள் , படைப்பாளர்கள் , கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக நலன் விரும்பிகள்,சிவில் அமைப்புக்கள் ,பெண்கள் அமைப்புக்கள், இளைஞர்கள் ,யுவதிகள் மற்றும் பாமர மக்கள் அனைவரையும் ஆதரவு வழங்க வேண்டும் என கோருகின்றேன்.
நம் உரிமைக்கான குரல்களோடு முன்னோக்கிச் செல்வோம், உரிமைகளை வெல்வோம். ” – என்றுள்ளது.
