கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளைமறுதினம் சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
ஆலயத்துக்குச் செல்லவுள்ள பக்தர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை காலை 4 மணி தொடக்கம் முற்பகல் 11.30 மணி வரை அரச பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
கச்சதீவுக்கான படகு சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகுக்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1300 ஆகும்.
கச்சதீவுக்கு குழுவாக/ தனியாக வருகை தரும் மக்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விவரங்களை இரண்டு பிரதிகளில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வெளிமாவட்டங்களில் இருந்து தமது சொந்தப் படகுகளில் திருவிழாவுக்குச் செல்வோர் தமது வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற் பயணப் பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுக்கொள்வதுடன் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு உணவு மற்றும் சனிக்கிழமை காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று யா. மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.