கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கபட உள்ளது.
கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை கட்டம் கட்டமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இச் சந்தர்ப்பத்தில் கண்டி மாவட்ட மக்கள் சார்பாக அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சர் கண்டி மாவட்ட அமைச்சர்கள் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் ஆளுநர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில் இத் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கோவிட்19 பாதுகாப்பு செயலணியின் பிரதானியும் பிரஜாஷக்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கண்டி மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 8000கும் மேலாக அதிகமாகி உள்ள நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. கண்டி மாவட்டத்தில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்குமாறு அவர் ஆளுநர் உட்பட அனைத்து துறையினருக்கும் அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கோவிட்19 காலப்பகுதியில் நாட்டின் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டுள்ள சந்தர்ப்பித்தில் தேயிலை துறை தொடர்ந்து செயல்பட்டு எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் அந்நிய செலவாணிக்கும் வழிவகுக்கின்றது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். எமது பெருத்தோட்ட தொழிலார்களின் அயராத உழைப்பின் காரணமாகவே இது சாத்தியமாகி உள்ளது எனவே தடுப்பூசி வழங்கும் போது அவர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பது நியாயமான கோரிக்கையாகும். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்களது பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.
கண்டி மாவட்டத்தில், பன்விளை, ரங்களை, தெல்தோட்டை, கலஹா, புஸ்ஸல்லாவ மற்றும் நாவலபிட்டிய போன்ற பகுதிகளில் உள்ள பெருத்தோட்ட பகுதிகளுக்கும் இந்த தொற்றின் பாதிப்பின் அடிப்படையில் வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக முன்னுரிமை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பல்லேகல கைத்தொழில் பேட்டை மற்றும் கைத்தொழில் வலையங்களுக்கும் முன்னுரிமை தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.