புத்தலை – கதிர்காமம் பிரதான பாதை வழியாக வாகனங்களில் கதிர்காமம் வருபவர்கள், அப் பாதை அருகில் காத்து நிற்கும் யானைகளுக்கு பழங்கள் மற்றும் உணவு வகைகள் வழங்குவது உடன் நிறுத்தப்படல் வேண்டும். தவறின் குறிப்பிட்ட நபர்களுக்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதுடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் தடுத்து வைக்கப்படுமென்று, ஊவா மாகாண வன திணைக்களப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்தார்.
ஊவா மாகாண வன திணைக்களப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே, மேற்கண்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவ் அறிக்கையில்,
“புத்தலை – கதிர்காமம் வழியாக வாகனங்களில் பயணிப்போர் பல வருடங்களாகவே யானைகளுக்கு பழங்கள் மற்றும் உணவு வகைகளை வழங்கி வருவது வழமையாகும். இப் பழங்களையும், உணவு வகைகளையும் பெற்றுக்கொள்வதற்கு, காட்டு யானைகளில் சில வீதி அருகில் காத்து நிற்கும். வாகனங்களில் பயணிக்கும் உல்லாச பிரயாணிகள் மற்றும் யாத்திரிகள் யானைகளுக்கு தத்தமது கரங்களினால் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவர். யானைகள் அவற்றைப் பெற்றுக்கொண்டு சாப்பிடும். இவ்வகையில் ஒரு சில காட்டு யானைகள் உணவுகள் மற்றும் பழங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பழக்கப்பட்டுமுள்ளன.
இந்த யானைகளுடன் மக்களையும், வாகனங்களையும் தாக்கும் யானைகளும் இருக்கக்கூடும். இதனால் பெரும் ஆபத்துக்கள் ஏற்படவே செய்யும். மேலும், கடந்த காலங்களில் யானைகளுக்கு பயந்து அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியிருப்பதுடன், உல்லாச பிரயாணிகள் மற்றும் யாத்திரிகளையும், மக்களையும் யானைகள் தாக்கியுமுள்ளன.
இத்தகைய அனர்த்தங்களை தடுக்கும் வகையில், உல்லாச பிரயாணிகளும், யாத்திரிகளும், மக்களும் மிகுந்த எச்சரிக்கைகளைப் பேண வேண்டும். பாதையருகில் நிற்கும் யானைகளுக்கு பழங்கள் மற்றும் உணவு வகைகள் ஆகியவற்றை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தவறின் அவர்களுக்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதுடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் தடுத்து வைக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை










