காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் நேற்று இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் பலியாகியுள்ளனர்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் இருந்த பணய கைதியான இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் இடன் அலெக்சாண்டர் என்பவரை விடுதலை செய்தனர்.
அதே சமயம், இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில், வடக்கு காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசாவில் அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 48 பேர் உயிரிழந்தனர் என ஆரம்பக்கட்ட தகவல் வெளியாகின.
தற்போது பலி எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளதாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தகவல் தெரிவிக்கின்றன. 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 52,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.